திரைத்துறை மீண்டு எழுவதற்கான வரிச் சலுகைகள், நிவாரணங்கள் கிடைக்கும் என நம்புவோம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியாவில் மே 3-ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிதிரை, சின்னதிரை படப்பிடிப்புகள் என எதுவுமே நடைபெறவில்லை. தயாரிப்பாளர்களும் கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.
படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தால், அதற்காக வாங்கிய பணத்தின் வட்டியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இதனிடையே, முன்னணி தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"பொழுதுபோக்கு அம்சங்களுக்காகத் தேவை தற்போது அதிகமாக உள்ளது. இது போன்ற பரிசோதனை காலங்களில் நம்முடைய படைப்பை ஒரு அத்திவாசிய பொருளாகப் பார்ப்பது நமக்கு ஒரு பெரிய அனுபவம். இப்போது வரை திரைத்துறை அதிகமாகக் கஷ்டப்பட்டுவிட்டது. ஊரடங்குக்குப் பிறகு துறை மீண்டு எழுவதற்கான வரிச் சலுகைகள், நிவாரணங்கள் கிடைக்கும் என்று நம்புவோம்"
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.