என் நண்பர் என்னை மன்னிக்கவே மாட்டார் - ‘குரு’ படம் குறித்து அபிஷேக் பச்சன் சுவாரஸ்யம்

By ஐஏஎன்எஸ்

2007ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ‘குரு’. மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். திருபாய் அம்பானியின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘தேரே பினா’ (தமிழில் ‘ஆருயிரே’) என்ற பாடல் மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்பாடல் படமாக்கப்பட்ட நினைவுகளை பகிர்ந்துள்ளார் அபிஷேக் பச்சன்.

இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

2006ஆம் ஆண்டு மதுரையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முடித்தவுடன் (எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த) ‘தேரே பினா’ பாடலை எடுக்க மணி முடிவு செய்தார். அந்த பாடலில் என்னை உற்று கவனித்தீர்களானால் எனது தலைமுடி நீளமாக இருப்பதை நீங்கள் காணலாம். ‘ஜூம் பராபர் ஜூம்’ படத்துக்காக முடி வளர்த்திருந்தேன்.

‘தேரே பினா’ பாடலின் படப்பிடிப்பு ‘ஜூம் பராபர் ஜூம்’ படப்பிடிப்பின் இடையே நடந்ததால் நான் தாடியை மட்டும் எடுத்தேன். என்னை முடிவெட்ட அவர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு சிறிய ஊசியை வைத்து முடி குறைவாக இருப்பது போல மாற்றினார்கள்.

கீழே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நபர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவ்ரவ். பாபு என்று நான் அன்புடன் அழைக்கும் அவர் சென்னையில் தங்கியிருந்தததால் என்னையும் ஐஸ்வர்யாவையும் காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருந்தார்.

‘அமைச்சர்’ சம்மந்தப்பட்ட ஒரு காட்சியை எடுக்க மணி முடிவு செய்திருந்தார். ஆனால் அப்போது அதில் நடிக்க வேண்டிய நடிகர் வராததால் மணியும், ராஜீவ் மேனனும் ஷூட்டிங் பார்க்கவந்த பாபுவை அமைச்சராக நடிக்க வைத்தனர். இப்படி செய்ததற்கு அவர் எங்களை எப்போதுமே மன்னிக்கவே மாட்டார். அன்றிலிருந்து என்னுடைய எந்த படப்பிடிப்புக்கு அவர் வருவதே இல்லை’

இவ்வாறு அபிஷேக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE