தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும்போது கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசுவாமியின் மகன் நிகில் கவுடாவின் திருமணம் நடைபெற்றதை நையாண்டி செய்துள்ளார் நடிகை ரவீணா டண்டன்.
பெங்களூரு நகரத்தின் தென்மேற்கு பகுதியில், 45 கி.மீ தூரத்தில் இருக்கும் பிடாடி என்ற இடத்தில் ஒரு பண்ணை வீட்டில், நிகில் கவுடாவுக்கும், ரேவதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து வெளிவந்துள்ள செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ரவீணா, "ஓ சரி. பாவம் இந்த பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு, நாட்டில் பல பேரால் அவர்கள் குடும்பத்திடம் செல்ல முடியவில்லை, பசியில் வாடுகிறார்கள், மீதியிருப்பவர்கள் மற்றவர்களுக்கு உதவ முயற்சிக்கின்றனர் என்பது பற்றியெல்லாம் தெரியாது போல. அங்கே என்ன பரிமாறப்பட்டது என்பது பற்றி யோசிக்கிறேன்" என்று நக்கலாகக் கருத்து பதிவிட்டுள்ளார்.
இதோடு சேர்த்து சமூக விலகல், அலட்சியம் செய்யப்பட்ட எச்சரிக்கைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான தனியுரிமை ஆகிய வார்த்தைகளையும் ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டுள்ளார்.
» உங்களைப் போல ஒரு சகாப்தமாக என்னால் என்றும் ஆக முடியாது: விக்ரமுக்கு துருவ் பிறந்த நாள் வாழ்த்து
» 'கில்லி' வெளியாகி 16 ஆண்டுகள்: அனைத்து வயதினருக்கும் பிடித்த படம்
முன்னதாக இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ரவீணா பதிவிட்டிருந்தார். "பல்வேறு வீட்டுப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் வேலையிழந்துள்ளனர். சம்பளத்தை நம்பியிருக்கும் அவர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என நான் பலரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்று ரவீணா கூறியிருந்தார்.