உங்களைப் போல ஒரு சகாப்தமாக என்னால் என்றும் ஆக முடியாது: விக்ரமுக்கு துருவ் பிறந்த நாள் வாழ்த்து

By ஐஏஎன்எஸ்

நடிகர் விக்ரமின் பிறந்த நாளுக்காக அவரது மகன் துருவ் விக்ரம் வீடியோ ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 17) பிறந்த நாள் காணும் விக்ரமுக்கு 54 வயதாகிறது. பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றுள்ள விக்ரம், தனது நடிப்புக்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். இவரது மகன் துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இன்று விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு துருவ், "பிறந்த நாள் வாழ்த்துகள் சீயான், இதோ உங்களின் மிகப்பெரிய ரசிகனிடமிருந்து ஒரு வீடியோ என்று" வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் சேது, பிதாமகன், ஐ என விக்ரம் நடித்த சவாலான கதாபாத்திரங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பேசியுள்ள துருவ், "நான் இன்று லட்சக்கணக்கானவர்களிடையே பேசிக் கொண்டிருக்கிறேன் என்றால் அது இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஒரு மனிதனின் அயராத உழைப்பும் மன உறுதியும்தான் காரணம். நான் நம்பிக்கை இழந்தபோதுகூட, அவர் முன்னே வந்து எனக்கு வழிகாட்டினார். வாழ்க்கை நம் மீதே சந்தேகம் கொள்ள வைக்கும், விட்டுக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளும், ஆனால் பின்னால் பார்க்காமல் தொடர்ந்தே முன்னே உழைக்க முடிவெடுத்தால் எதுவும் சாத்தியம் என்பதைக் காட்டினார். 'ஆதித்ய வர்மா' சாத்தியப்பட்டது உங்களால் மட்டுமே அப்பா.

அது ஒரு ரீமேக் படமாக இருக்கலாம். ஆனால் என்றும் என் இதயத்துக்கு நெருக்கமானதாக இருக்கும். ஏனென்றால் இந்தப் படம் எடுக்கும்போதுதான், நான் ரசிகராக இருந்த ஒருவரிடமிருந்து நடிப்பு என்று கலையைக் கற்றுக் கொண்டேன். அது நீங்கள்தான் அப்பா. ஆதித்யா உங்கள் மனதில் ஒரு சிந்தனையாய் இருந்தது.

எனக்காக அதற்கு உயிர் கொடுத்தீர்கள். நமது கனவுகளை நனவாக்க நான் கடினமாக உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன். உங்களைப் போல ஒரு சகாப்தமாக என்னால் என்றும் ஆக முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை நான் பெருமையுடன் கூறுகிறேன். ஆதித்ய வர்மாவுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

துருவ் விக்ரமின் அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விக்ரம், 'கோப்ரா' மற்றும் 'பொன்னியன் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE