வரும் நாட்களில் கரோனாவிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - விவேக் பேச்சு

By செய்திப்பிரிவு

வரும் நாட்களில் கரோனாவிலிருந்து தப்பிக்கச் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து நடிகர் விவேக் பேசியுள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு, இப்போது இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சிகள், பெரிய நிறுவனங்கள் யாவும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இதனிடையே, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் பலரும் மீண்டும் மக்களை வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

தற்போது விவேக் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"இந்தியாவே 25 நாட்கள் லாக் டவுனில் இருந்திருக்கிறோம். இப்போது இன்னும் கொஞ்சம் நாள் இருக்கப் போகிறோம். இவ்வளவு நாள் இருந்தது முக்கியமல்ல, இனிமேல் இருக்கப் போவதுதான் முக்கியம். மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் 130 கோடி மக்கள் தொகையுள்ள நம் நாட்டுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய தொற்று என்பது ஒப்பிடுகையில் குறைவு. அதற்குக் காரணமே ஊரடங்கைக் கடைப்பிடித்ததுதான்.

அரசு சொன்னபடி நாம் ஓரளவுக்கு நடந்திருக்கிறோம் என்பதுதான் இந்தக் கம்மியான தொற்று காட்டுகிறது. இதை இன்னும் குறைத்து நாம் முழுமையாகக் குறைத்து இதிலிருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்றால், அடுத்து வரும் நாட்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.

வாய், மூக்கு இரண்டையும் மறைப்பது போன்ற முகக் கவசம் அணிய வேண்டும். கண் குறித்து கண் மருத்துவரிடம் கேட்ட போது, அதன் மூலம் பெரிய ஆபத்து இல்லை என்று சொன்னார்கள். வாய், மூக்கு இரண்டுமே கண்டிப்பாக முகக் கவசத்தால் மூடியிருக்க வேண்டும். மக்கள் அனைவருமே வீட்டை விட்டு வெளியே சென்றால், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். இரண்டு சம் ரொம்ப முக்கியம். சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முகக் கவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம். முகக் கவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்".

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE