மார்வெல் படங்களுக்கு இந்தியாவில் இவ்வளவு வரவேற்பா? - கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆச்சர்யம்

By ஐஏஎன்எஸ்

'தோர்' உள்ளிட்ட மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' என்ற படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
முதலில் 'தாகா' என்று பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு அகமதாபாத், மும்பை என இந்திய நகரங்களில் நடந்தது. அப்போது கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தைக் காண பெரும் திரளாக குவிந்தனர்.

இந்தியாவில் கிடைத்த இந்த பெரும் வரவேற்பு குறித்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நடந்த படபிடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மக்கள் அற்புதமானவர்கள். இந்தியாவில் மார்வெல் படங்களுக்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எனக்கு தெரியாது. அந்த தருணம் எங்கள் படக்குழுவினருக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது.

பாலங்கள் மீதும், கட்டிடங்கள் மீதும், சாலையில் வரிசையாகவும் நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டமாக நின்றுகொண்டு எங்களை உற்சாகப்படுத்தினார்கள். இது போன்ற ஒரு அனுபவம் எனக்கு இதற்கு முன்பு கிடைத்ததில்லை. மேடையின் நடுவே நிற்கும் ஒரு ராக்ஸ்டாரைப் போல உணர்ந்தேன்.

இவ்வாறு கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

'எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தில் ரந்தீப் ஹோண்டா, பங்கஜ் த்ரிபாதி, பியான்ஷு பைன்யுல்லி, ருத்ராக்‌ஷ் ஜைஸ்வால் உள்ளிட்ட இந்திய நடிகர்களும் நடித்துள்ளனர். சர்வதேச க்ரிமினல் ஒருவரின் கடத்தப்பட்ட மகனை ஹெம்ஸ்வொர்த் மீட்பதே படத்தின் கதை. 2018-ம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்தாலும் தற்போதுதான் இப்படம் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE