ட்விட்டர் தளம் ஒருதலைப்பட்சமானது; இந்தியாவுக்கு எதிரானது: கங்கணாவின் சகோதரி காட்டம்

By செய்திப்பிரிவு

ட்விட்டர் தளம் ஒருதலைப்பட்சமானது, இந்தியாவுக்கு எதிரானது என்று கங்கணாவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

கங்கணா ரணாவத் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதால், அவருடைய முகமாகத் திகழ்ந்தவர் அவரது சகோதரி ரங்கோலி சாண்டெல். தொடர்ச்சியாக பல்வேறு இந்தி திரையுலகப் பிரபலங்கள் பலரையும் திட்டி தனது ட்விட்டர் பதிவில் கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.

சமீபத்தில் கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல் இல்லாமல் மீண்டும் நேரடியாக பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் என்று கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானார். சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்கிப் பதிவிட்டதாக ரங்கோலியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. பலரும் அளித்த புகாரின் பேரில் ட்விட்டர் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பாக கங்கணாவின் சகோதரி ரங்கோலி கூறியிருப்பதாவது:

"ட்விட்டர் என்பது அமெரிக்கத் தளம். முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, இந்தியாவுக்கு எதிரானது. இந்துக் கடவுள்களைக் கிண்டல் செய்யலாம், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சரை தீவிரவாதிகள் என்று கூப்பிடலாம், ஆனால் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மீது கல்லடிப்பவர்களைப் பற்றி ஏதாவது சொன்னால் உங்கள் கணக்கை ரத்து செய்துவிடுவார்கள்.

எனது பார்வை மற்றும் நேர்மையான அபிப்ராயங்களோடு அதுபோன்ற தளங்களுக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்க எனக்கு ஆசையில்லை. எனவே நான் எனது கணக்கை மீட்டெடுக்கப் போவதில்லை. நான் எனது சகோதரியின் செய்தித் தொடர்பாளராக இருந்தேன். இனி அவரது நேரடிப் பேட்டிகளைப் பாருங்கள். அவர் ஒரு பெரிய நட்சத்திரம், உங்களைச் சென்றடைய அவருக்கு நிறைய வழிகள் உள்ளன. ஒருதலைப்பட்சமான ஒரு தளத்தை எளிதாக நிராகரிக்கலாம்".

இவ்வாறு ரங்கோலி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE