தனது உணவகத்தில் திரைத்துறை கலைஞர்களுக்கு இலவச உணவு: நடிகர் விக்னேஷ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தனது உணவகத்தில் திரைத்துறை கலைஞர்களுக்கு இரவு இலவச உணவு அளிப்பதாக நடிகர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1200-ஐத் தாண்டிவிட்டது. ஊரடங்கு அமலில் இருப்பதால், அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைத்துறையை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு பெப்சி, நடிகர் சங்கம் ஆகியவை உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளன.

இதனிடையே உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உள்ளிட்ட பலருமே இன்னும் நிவாரண உதவிகள் கிடைக்காமல் கஷ்டப்படும் சூழல் இருந்து வருகிறது. இதைக் கணக்கில் கொண்டு சில திரையுலகினர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

தற்போது நடிகர் விக்னேஷ் தன் சார்பிலிருந்து உதவியாக என்ன செய்யவுள்ளேன் என்பதை ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"இப்போது கரோனா வைரஸ் தொற்றினால் நிறைய திரைத்துறை சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். நான் ஈக்காட்டுத்தாங்கலில் சேலம் ஆர்.ஆர் என்ற ஹோட்டலை நடத்திக் கொண்டிருக்கிறேன். திரைத்துறையைச் சேர்ந்த துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், நடிகர்கள் தொடங்கிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்துக் கலைஞர்களும் என் உணவகத்தில் இலவசமாக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு 7- 9 மணி வரை எனது உணவகம் திறந்திருக்கும். திரைத்துறையைக் கலைஞர்கள் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். உங்களை அன்புடனும் பணிவுடனும் அழைக்கிறேன். வரவேற்கிறேன்''.

இவ்வாறு விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE