என்னோடு சேர்ந்து நடிக்க வேண்டுமா?; கரோனா பாதிப்புக்கு உதவி செய்யுங்கள் - டிகாப்ரியோவின் புது முயற்சி

By பிடிஐ

நாளுக்கு நாள் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தினமும் பல நூறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். உலகம் முழுவதுமுள்ள பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், சமூக ஆர்வலருமான லியோர்னாடோ டிகாப்ரியோ கரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட ஒரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''என்றைக்காவது நீங்கள் தி கிரேட் மார்ட்டின் ஸ்கோர்செஸி, ராபர்ட் டி நிரோ மற்றும் என்னுடன் பணியாற்ற முடிந்தால் எப்படியிருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு. நானும் ராபர்ட்டும், மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கவுள்ள ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ என்னும் படத்தின் இணைந்து நடிக்கவுள்ளோம்.

இந்தப் படத்தில் எங்களோடு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை உங்களுக்குத் தருகிறோம். மேலும், ஒருநாள் முழுவதும் படப்பிடிப்புத் தளத்தில் எங்கள் மூவரோடும் இருக்கலாம். படத்தின் ப்ரீமியர் காட்சிக்கும் அனுமதி உண்டு. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது http://www.allinchallenge.com இந்த தளத்திற்குச் சென்று கரோனா பாதித்த மக்களுக்க உதவ வேண்டும்''.

இவ்வாறு டிகாப்ரிரோ கூறியுள்ளார்.

‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ 1920களில் அமெரிக்காவின் ஓசே என்ற பகுதியில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE