நடிக்கச் சொல்லி ரஜினி மகள் கேட்டதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மணிரத்னம். தற்போது இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருக்கிறார் மணிரத்னம்.
நேற்று (ஏப்ரல் 14) முதன்முறையாக மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் மணிரத்னம். இந்தக் கேள்வி-பதில் நிகழ்ச்சி சுமார் 1 மணிநேரம் வரை சென்றது.
இந்தக் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் மாதவன், குஷ்பு, அதிதி ராவ் உள்ளிட்ட பலரும் மணிரத்னத்திடம் கேள்விகள் எழுப்பினர். அனைத்து கேள்விகளுக்கும் ரொம்பவே நிதானமாகவும், சந்தோஷமாகவும் மணிரத்னம் பதிலளித்தார். இது அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
» கனடாவில் சிக்கிய மகன் குறித்து கவலைப்படவில்லை; சஞ்சய் பாதுகாப்பாக உள்ளார்: விஜய் தரப்பில் விளக்கம்
இந்தக் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர், "நடிக்கும் ஆசை வந்திருக்கிறதா? உங்கள் நண்பர்கள் யாரும் நடிக்கக் கேட்டதில்லையா?" என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்கு "ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிக்கச் சொல்லிக் கேட்டார். நான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
ஏனென்றால் நான் நடித்துவிட்டு மீண்டும் இயக்கச் சென்றால், என்னிடம் நடிக்கும் நடிகர்கள், நான் தான் நீங்கள் நடித்த அழகைப் பார்த்தேனே என்று என்னை ஏளனம் செய்தால் என்ன செய்ய? இப்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து நான் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் நடிக்காமல் இருப்பது நல்லது" என்று பதிலளித்தார் மணிரத்னம்.