‘அந்த மக்கள் கோபப்பட்டால் விபரீதம் ஆகிவிடும்’- பாந்த்ரா தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்ஹா கண்டனம்

வெளிமாநில தொழிலாளர்கள் மீது மும்பை போலீஸார் நடத்திய தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு ஏப்.14ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்லலாம் எனக் கருதி வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்டனர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கப்படாது எனவும் தகவல் வெளியானதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். சம்பவமறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘தப்பட்’, ‘ஆர்டிகிள் 15’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் அனுபவ் சின்ஹா வெளி மாநில தொழிலாளர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனுபவ் சின்ஹா கூறியிருப்பதாவது:

நான் உ.பி - பீஹார் எல்லைப் பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு அந்த மக்களைப் பற்றி தெரியும். நான் அவர்களோடு தான் வளர்ந்தேன். நான் உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். அந்த மக்கள் கோபப்பட்டால் விபரீதம் ஆகிவிடும். அவர்கள் வீட்டுக்கு செல்ல பல நூறு மைல் தூரம் நடப்பவர்கள். தற்போது அவர்கள் உணவைப் பற்றி கவலைப்படவில்லை. தயவுசெய்து அவர்களிடம் பேசுங்கள். அவர்கள் மீது தடியடி நடத்தாதீர்கள்.

இந்த தொழிலாளர்கள் தூங்குவதற்கு மட்டுமே தங்கள் வீடுகளை பயன்படுத்துபவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களில் தாங்கள் பணிபுரியும் இடத்தில் உள்ள கழிப்பறைகளை தங்குவதற்கு பயன்படுத்துகின்றனர். அந்த வீடுகளில் 24 மணி நேரமும் வெளியே வராமல் உள்ளேயே இருக்கமுடியாது. அதனால்தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர்.

சமூக விலகலை அவர்களுக்கு புரிய வைக்கும் முன் நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டில் விலகுவதற்கே இடமிருக்காது. ஆனால் கடைசியாக எப்போது அவர்களை மனதில் வைத்து நம் நாட்டில் திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு அனுபவ் சின்ஹா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE