ரசிகா
தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான மலையாள நடிகர் ப்ருத்விராஜ். 'பாரிஜாதம்', 'மொழி', 'கண்ணாமூச்சி ஏனடா', 'நினைத்தாலே இனிக்கும்' உள்பட பல நேரடித் தமிழ் படங்களில் நடித்திருக்கும் அவர், கடந்த ஆண்டு மலையாளத்தில் 125 கோடி ரூபாய் வசூலித்த ‘லூசிஃபர்’ என்ற மலையாளப் படத்தை இயக்கியிருந்தார். பிஜு மேனனுடன் இணைந்து அவர் நடித்திருக்கும் ‘அய்யப்பனும் கோஷியும்’ படமும் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. ஒரு இயக்குநராகவும் தன்னை வெளிக்காட்டியிருந்தாலும் நாயகனாக நடிப்பதை நிறுத்தவில்லை.
இந்நிலையில் தொடர்ந்து பல மலையாளப் படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் அவர் நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்காகத் தனது படப்பிடிப்புக் குழுவினருடன் படப்பிடிப்புக்காக ஜோர்டன் நாட்டுக்குச் சென்றார். பிரபல மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, இயக்கும் அந்தப் படத்துக்கு ‘ஆடு ஜீவிதம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பென்யாமின் என்ற இளம் மலையாள எழுத்தாளர் எழுதிய ‘கோட் டேய்ஸ்’ என்ற நாவல்தான் ‘ஆடு ஜீவிதமாக’ படமாகி வருகிறது.
கேரளப் பல்கலைக் கழகங்களில் நவீன இலக்கியம் பயிலும் மாணவர்களுக்குப் பாடமாக இந்த நாவல் உள்ளது. கதை என்னவென்றால் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று அங்கு ஆடு மேய்க்கும் பணிக்குத் தள்ளப்படும் நாயகனின் கதை. கொத்தடிமையிலிருந்து மீண்டு, தப்பித்து நாடு திரும்பும் ஒருவனின் கதை. கைநிறைய ஊதியம் என்று அழைத்துச் சென்று பாலைவனத்தில் கொத்தடிமை ஆக்கும் உண்மையைப் பேசும் கதை என்பதால், இந்தக் கதாபாத்திரத்துக்காக 15 கிலோ எடையைக் குறைத்து நடித்து வந்தாராம் ப்ருத்விராஜ்
» அலைபாயுதே, அஜித், ஷாலினி, மணிரத்னம், காதல், சாக்லேட் பாய் இமேஜ்: மாதவன் சிறப்புப் பகிர்வு
» சிங்கப்பூர் அமைச்சர் வேண்டுகோள்: உடனே வீடியோ வெளியிட்ட ரஜினி
கரோனா வைரஸ் பரவலுக்கு ஜோர்டனின் முன்னதாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது. இதனால், அங்கே விமானச் சேவைகள் ரத்தானது. இந்நிலையில் நாடு திரும்ப முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர். படக்குழு எப்படியாவது நாடு திரும்புவதற்கு உதவி செய்யுங்கள் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையினை தொடர்பு கொண்டுள்ளது படக்குழு.
தற்போது அம்மா நடிகர்கள் சங்கம் வழியாக நடிகர் மோகன்லாலே கேரள முதலமைச்சர் கவனத்திற்குச் சென்றிருப்பதால், அதை மத்திய அரசின் கவனத்துக்கு முதல்வர் எடுத்துச் சென்றிருக்கிறாராம். ஆனால், ஜோர்டன் நாட்டு அரசாங்கமோ, இந்தியாவில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில் இப்போதைக்கு விமானம் எதையும் அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில், இன்று(ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினத்துடன் இன்று மலையாளப் புத்தாண்டான விசு’வும் பிறந்துள்ளது. ஜோர்டனில் ஊரடங்குக்குப்பின்னர் சில தினங்கள் படப்பிடிப்பு நடத்தினாலும் தற்போது படப்பிடிப்பும் இன்றி ஹோட்டலில் தவித்து வருகிறார் ப்ருத்விராஜ். “ கடந்த ஆண்டு புத்தாண்டு நாளில் மனைவி மற்றும் உறவுகளுடன் அற்புதமான மதிய விருந்தை ருசித்தேன். ஆனால், இந்த ஆண்டு பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உறவுகளைப் பிரிந்து வாடுகிறேன். இருப்பினும் உறவுகளுடன் விரைவில் ஒன்றிணையும் காலம் ஒன்று வரும்” என்று நம்பிக்கை தெரிவித்து தனது மனைவியுடன் கடந்த புத்தாண்டில் விருந்துண்ட படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏக்கமுடன் பதிவிட்டுள்ளார் நடிகர், இயக்குநர் ப்ருத்விராஜ்.