நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது அண்ணா: அட்லி உருக்கம்

By செய்திப்பிரிவு

நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது விஜய் அண்ணா என்று 'தெறி' வாய்ப்பு குறித்து அட்லி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். தாணு தயாரித்த இந்தப் படம் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது.

இன்றுடன் இந்தப் படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆகிறது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் என்பதால், விஜய் ரசிகர்கள் இன்று காலை முதலே கொண்டாடி வருகிறார்கள்.

'தெறி' வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் அட்லி தனது ட்விட்டர் பதிவில், "'தெறி' எனக்குப் பிடித்தமான, என் இதயத்துக்கு நெருக்கமான படம். எல்லாவற்றுக்கும் விஜய் அண்ணாதான் காரணம். நீங்கள் இல்லையென்றால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது அண்ணா. எனக்கு இந்த சிறந்த வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி அண்ணா. என் 'தெறி' குழுவுக்கு என் அன்புகள். தயாரிப்பாளர் தாணுவுக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

இவரது ட்வீட்டைக் குறிப்பிட்டு அட்லியின் மனைவி ப்ரியா அட்லி, "ஆரம்பத்திலிருந்து இன்று வரை எங்களுடன், எங்கள் பக்கத்தில் நின்ற பெரிய சகோதரர், எங்களை என்றும் ஆதரிப்பவர் விஜய் அண்ணா. உங்கள் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி அண்ணா. மிக்க நன்றி. தயாரிப்பாளர் தாணு மற்றும் ஒட்டுமொத்த தெறி குழுவுக்கு என் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE