'மாஃபியா' இயக்குநர் கார்த்திக் நரேன் மற்றும் லைகா நிறுவனத்துக்கு அருண் விஜய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக அதன் பொருட்செலவுக்கு ஏற்ற அளவிலிருந்தது. ஆனால், விமர்சன ரீதியாக போதிய வரவேற்பைப் பெறவில்லை.
இதில் அருண் விஜய்க்கு வில்லனாக பிரசன்னா நடித்திருந்தார். அதிலும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இன்னொரு அருண் விஜய்யை அறிமுகப்படுத்தியிருப்பார் இயக்குநர் கார்த்திக் நரேன். இது 'மாஃபியா' 2-ம் பாகத்துக்குத் தொடக்கமாக அமைந்தது. இதன் 2-ம் பாகம் எப்போது என்பது எல்லாம் இன்னும் முடிவாகவில்லை.
இதனிடையே, 'மாஃபியா' படக்குழுவினருக்கு அருண் விஜய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"இங்கிருக்கும் டெக்ஸ்டர் ரசிகர்கள் அனைவருக்கும். மாஃபியா படத்திலிருந்து யாரும் பார்க்காத புகைப்படங்கள். நான் 17,000 அடியிலிருந்து குதிப்பதற்கு முன் எடுத்த புகைப்படங்கள். டெக்ஸ்டர் உருவான வீடியோவை வெளியிட வேண்டும் என்று கார்த்திக் நரேன் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ரசிகர்கள் டெக்ஸ்டர் பற்றிய சிறிய அறிமுகத்தை மட்டுமே பார்த்திருக்கிறார்கள்"
இவ்வாறு அருண் விஜய் தெரிவித்துள்ளார்.