எந்த டாஸ்க்கும் இல்லை; ஏமாற்றம்: பிரதமரின் உரைக்கு இயக்குநர் கிண்டல்

By செய்திப்பிரிவு

பிரதமரின் உரையில் எந்த டாஸ்க்கும் இல்லாதது ஏமாற்றமாக இருப்பதாக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த முதலில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

ஊரடங்கை நீட்டித்திருப்பதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதே வேளையில், நலிந்தவர்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதனிடையே, பிரதமர் மோடி இதற்கு முன்பாக இரண்டு முறை உரையாற்றும் போதும் பொதுமக்களின் ஒற்றுமைக்காக சில வேண்டுகோள்களை விடுத்தார். 5 மணியளவில் வீட்டு வாசலிலிருந்து கை தட்டுவது மற்றும் இரவு 9 மணியளவில் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்றுவது என பிரதமர் விடுத்த வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றினார்கள்.

பிரதமர் மோடியின் இன்றைய பேச்சில் டாஸ்க்குகள் எதையுமே தெரிவிக்கவில்லை. இதனை 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், "இந்த முறை எந்த டாஸ்க்கும் இல்லை.. உண்மையாகவே ஏமாற்றமாக இருக்கிறது. இந்த டிவி நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று வியக்கிறேன்" என்று இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE