'அலைபாயுதே' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: மாதவன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'அலைபாயுதே' வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவானதை, நடிகர் மாதவன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படம் 'அலைபாயுதே'. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் தொடங்கி, படமும் தமிழக இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாகவே மாதவன் நாயகனாக அறிமுகமானார்.

இதில் மாதவன், ஷாலினி, ஜெயசுதா, விவேக், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரவிந்த்சாமி மற்றும் குஷ்பு இருவரும் கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வசனங்கள் யாவும் இப்போதுள்ள காதலர்கள் மத்தியில் பிரபலம்.

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதனால் இந்தப் படத்தில் பணிபுரிந்தவர்கள் பலருமே இந்தப் படத்தின் நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். 'அலைபாயுதே' படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில், "’அலைபாயுதே' வெளியாகி இருபது வருடங்கள். உலகம் முழுவதும் அதன் ரசிகர்களின் மனதில் இன்னமும் புதியதாகவே இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

நாயகன் மாதவன் தனது ட்விட்டர் பதிவில், "எனது முதல் படம் வெளியாகி 20 ஆண்டுகள் பறந்துவிட்டன. என்னையும், நினைவுகளையும் இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று (ஏப்ரல் 14) மாலை 5 மணியளவில் சுஹாசினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் இயக்குநர் மணிரத்னம் கலந்துரையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE