கரோனா பாதிப்பு: தினமும் 1000 குடும்பங்களுக்கு உணவளிக்கும் சஞ்சய் தத்

ஒவ்வொரு நாளும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 412 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்காக தினமும் உணவு வழங்க முன்வந்துள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

சாவர்க்கர் ஷெல்டர்ஸ் என்னும் அமைப்போடு இணைந்து தினமும் 1000 குடும்பங்களுக்கு உணவளிக்கவுள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் தத் கூறும்போது, ''இந்தத் திட்டத்தின் முதுகெலும்பே சாவர்க்கர் ஷெல்டர்ஸ் அமைப்புதான். அவர்கள் கடினமாக உழைக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் வாழ்வின் இந்தக் கடினமான கட்டத்தை விரைவில் நாம் கடப்போம்'' என்றார்.

சஞ்சய் தத்தின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ள சாவர்க்கர் ஷெல்டர்ஸ் அமைப்பின் தலைவர் ருபேஷ் சாவர்க்கர் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் பங்கேற்க மக்கள் தாமாகவே முன்வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தச் சூழலில் பலதரப்பட்ட மக்கள் உணவின்றிக் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக சஞ்சய் தத் எடுத்திருக்கும் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. அவரது மனிதநேயப் பணிகள் மற்றவர்களுக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும்''.

இவ்வாறு சஞ்சய் தத் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE