பாகிஸ்தான் கலைஞர்களுடன் சேர்ந்து பாடக்கூடாது - இந்திய பாடகர்களுக்கு சினிமா தொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை

பாகிஸ்தானை சேர்ந்த இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பாடும் இந்திய பாடகர்களை இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் எச்சர்க்கை விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த பாடகியான ஹர்ஷ்தீப் கவுர், பிரபல பாகிஸ்தான் பாடகர் ராஹத் ஃபதே அலி கானுடன் இணைந்து ஒரு ஆன்லைன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடினார். இது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த பாடகர்கள், இசை கலைஞர்களுக்கு இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தானை சேர்ந்த எந்த இசைக்கலைஞர்களுடனும், பாடர்களுடனும் எந்த வகையிலும் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் தனது உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

ஆனால் சில உறுப்பினர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ராஹத் ஃபதே அலி கானுடன் இணைந்து பாடல் பாடியுள்ளனர். இது இணையத்திலும் வெளியாகியுள்ளது. இது போல செயல்களின் மூலம் அவர்கள் சம்மேளனத்தின் சுற்றறிக்கையை அப்பட்டமாக மீறுகின்றனர். இந்த நிகழ்வுகள் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இனி எந்தவொரு இந்திய இசைக்கலைஞர்களும், பாடகர்களும் பாகிஸ்தான் கலைஞர்களோடு எந்த வகையிலும் இணைந்து பணியாற்றினால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE