‘புல்லட் பாண்டி’தான் சிறந்த கிரிக்கெட் வீரர்: ஐசிசி கேள்விக்கு அஸ்வின் கிண்டல் பதில்

கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு முடியும் தருவாயில் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

ஊரடங்கால் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவிடுவது உள்ளிட்டவற்றைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று (10.04.2020) ஒரு பதிவில், ''கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்?'' என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களின் பெயரைக் குறிப்பிட்டனர்.

ஐசிசியின் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன், '' ‘கோவில்’ படத்தில் வரும் புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டுள்ளார். அதோடு, ''திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்'' என்று கேள்வி கேட்டிருந்தார்.

அஸ்வினின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பலரும், ‘வெண்ணிலா கபடிகுழு’ விஷ்ணு விஷால், ‘கில்லி’ விஜய், ‘பிகில்’ விஜய் என்று சீரியஸாகவும், ‘மான்கராத்தே’ சிவகார்த்திகேயன், ‘சின்னகவுண்டர்’ விஜயகாந்த், ‘சென்னை 28’ பிரேம்ஜி என்று கிண்டலாகவும் பதிலளித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE