ஏழை மக்களுக்காக நாள்தோறும் 2000 உணவுப் பொட்டலங்கள் வழங்கும் அமிதாப் பச்சன்

மும்பை முழுவதுமுள்ள ஏழை மக்களுக்காக தினமும் 2000 உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார் நடிகர் அமிதாப் பச்சன்.

ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 412 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்காக தினமும் 2000 உணவுப் பொட்டலங்களை வழங்குவதாக நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''மும்பையில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் மதியம் மற்றும் இரவு ஆகிய 2 வேளைகளும் 2000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அடங்கிய 3000 மூட்டைகளும் வழங்கப்படுகின்றன.

ஹாஜி அலி தர்கா, மாஹிம் தர்கா, பாபுல்நாத் கோயில் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதுமுள்ள எல்லாப் பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் செல்ல விரும்புகிறோம். ஆனால் அதில் பல நெருக்கடிகள் உள்ளன. தற்போது மும்பை முழுவதும் ஊரடங்கு மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதால் பல பகுதிகளில் உணவை விநியோகிப்பது சிரமமாக உள்ளது.

தினமும் உணவு விநியோகிக்கப்படும்போது மக்களை இடைவெளி விட்டு நிற்க வைத்து விநியோகிக்குமாறு பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்''.

இவ்வாறு அமிதாப் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE