தமிழ்ப் புத்தாண்டுக்கு 'தர்பார்' படம் ஒளிபரப்பப்படும் என்று சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் பொங்கல் வெளியீடாக இந்த ஆண்டு திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிதாக இந்தப் படம் சோபிக்கவில்லை
ஆனால், இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும்போதே கடும் போட்டிக்கு இடையே சன் தொலைக்காட்சி இதன் ஒளிபரப்பு உரிமையைப் பெரும் விலைக்குக் கைப்பற்றியது. தற்போது தமிழகத்தில் கரோனா அச்சத்தால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். இதனால், பல்வேறு தொலைக்காட்சிகளில் முன்னணி நாயகர்களின் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 'தர்பார்' படத்தைத் திரையிடுகிறது சன் தொலைக்காட்சி. அன்றைய தினம்தான் இந்த 21 நாட்கள் ஊரடங்கும் முடிவடைகிறது. இந்தத் தருணத்தில் 'தர்பார்' படத்தை ஒளிபரப்பி பெரும் டி.ஆர்.பியைக் கைப்பற்ற சன் தொலைக்காட்சி முடிவு செய்திருப்பது தெளிவாகிறது.
ரஜினி நடித்த படங்களிலேயே, வெளியாகிக் குறைந்த நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படமாக 'தர்பார்' அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.