எனது ட்விட்டர் கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன: குஷ்பு தகவல்

எனது ட்விட்டர் கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகப் பிரபலங்களில் அதிகப்படியாக ட்விட்டர் தளத்தை உபயோகிப்பவர் என்றால் அது குஷ்புதான். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருப்பதால், கட்சி சார்ந்து அதிகமாக ட்வீட்கள் செய்வார்.

சமீபத்தில் கரோனா அச்சம் தொடர்பாக பிரதமர் மோடியின் நடவடிக்கைகளைக் கடுமையாகத் திட்டி ட்வீட்களை வெளியிட்டு இருந்தார். கடந்த 2 நாட்களாக அவருடைய ட்விட்டர் தளத்தில் எந்தவொரு ட்வீட்டுமே வெளியாகவில்லை.

தற்போது தனது ட்விட்டர் கணக்கின் நிலை தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது என ட்விட்டர் எனக்கு ஒரு செய்தி அனுப்பியது. மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து மூன்று முறை எனது கணக்குக்குள் நுழைய முயன்றுள்ளனர். கடந்த 48 மணிநேரங்களாக என்னால் என் கணக்குக்குள் லாக் இன் செய்ய முடியவில்லை. பாஸ்வேர்டையும் மாற்ற முடியவில்லை.

ட்விட்டர் தரப்பிலிருந்து உரிய உதவி கிடைக்கவில்லை. எனது கணக்கு ரத்தாக வாய்ப்புகள் உள்ளன என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். இப்போதே நன்றி. வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE