200 ஏழை குடும்பங்களுக்கு தினமும் உணவளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்

By செய்திப்பிரிவு

மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் கரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் காட்டுத் தீ போல பரவிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன.

இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலிப் பணியாளர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி உட்பட மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது வீட்டுக்கு அருகில் உள்ள 200 ஏழைக் குடும்பங்களுக்கு தினமும் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது:

எங்கள் வீட்டுக்கு அருகில் 200 ஏழை குடும்பங்கள் அடிப்படை தேவைகள் இன்றி கஷ்டப்படுவதை என் தந்தை கண்டறிந்தார். தினமும் அவர்களுக்காக 2 வேளை உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் தொடர்ந்து அவர்களுக்கு உதவ தீர்மானித்துள்ளோம்.

நம்மில் பலர் நல்ல வசதியுடன் இருக்கிறோம். அவசர காலங்களுக்கு தேவையான இருப்பிடம், உடை, உணவு அனைத்தும் நம்மிடம் உள்ளது. ஆனால் அவற்றை நாம் சமூகத்துக்கும் கொடுத்து உதவ வேண்டும். என்னை பொறுத்தவரை அந்த மக்கள் சாப்பிடும் போது அவர்களின் முகத்தில் ஏறபடும் மகிழ்ச்சிக்கு இணையாக எதுவும் இல்லை. அது தான் எனக்கு அதீத மகிழ்ச்சியை தருகிறது. எனவே என்னால் முடிந்த இந்த சிறு உதவியை செய்து வருகிறேன்.

இவ்வாறு ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE