ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது: பிரசன்னா வேதனை

By செய்திப்பிரிவு

ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது என்று ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது பிரசன்னா குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

திரையுலகப் பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால், தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள். நேற்று (ஏப்ரல் 1) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரசன்னா பதிலளித்தார்.

சமீபமாக வில்லனாக நடித்து வருவது குறித்த கேள்விக்கு, "நான் நானாக இல்லாமல் இருப்பதற்கு அந்தக் கதாபாத்திரங்கள் ஒரு வாய்ப்பைத் தருகின்றன. அந்த மாற்றம் எனக்கு உற்சாகத்தைத் தருகிறது” என்று பிரசன்னா பதிலளித்துள்ளார்.

மேலும், நாயகனாக நடிக்கவுள்ள படங்கள் குறித்து ஒருவர் கேட்க, "நாயகனாக மூன்று படங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறேன். எது முதலில் ஆரம்பிக்கும் என்று தெரியாது. உலகின் பல விஷயங்களைப் பாதித்துள்ளது போல கோவிட் இதையும் பாதித்துள்ளது'' என்று பிரசன்னா தெரிவித்தார்.

''மீண்டும் நாயகனாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு முழு நகைச்சுவை சாகசப் படத்தில் உங்களைப் பார்க்க விருப்பம். நல்ல ஸ்டைலான ஒரு கதாபாத்திரம்" என்று அந்த ரசிகர் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினார். அதற்கு, "கண்டிப்பாக விரைவில் நடக்கும். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஓரங்கட்டப்படுவது சோர்வாக இருக்கிறது. முன்னால் நிற்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் என்னை ஆதரிப்பீர்கள் என்று தெரியும். விரைவில் அந்த இடத்தை அடைவேன்" என்று பதிலளித்துள்ளார் பிரசன்னா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE