தனுஷ் - கார்த்திக் நரேன் கூட்டணி இணையும் படத்தில் நடிக்கவுள்ளதை நடிகர் பிரசன்னா உறுதி செய்தார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்கள், காவல்துறையினர் ஆகியோரைத் தவிர மற்ற அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.
திரையுலகப் பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால், தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.
நேற்று (ஏப்ரல் 1) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரசன்னா பதிலளித்தார்.
» கரோனா வைரஸ் பாதிப்பு: ஜே.எஸ்.கே முன்வைக்கும் 4 முக்கிய கோரிக்கைகள்
» காவல்துறையினர், மருத்துவர்களுக்கு பாரதிராஜா உதவி: தமிழக அரசுக்கும் பாராட்டு
அதில், தனுஷ் - கார்த்திக் நரேன் இணையும் படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் பிரசன்னா. ரசிகர் ஒருவர், "நலமா சார், அடுத்த படம், திட்டம்?" என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு "நன்றாக இருக்கிறேன். அஸ்வின் சரவணன் படத்தை ஆரம்பிக்கவிருந்தோம். ஆனால், ஊரடங்கால் தள்ளிப் போயிருக்கிறது. கார்த்திக் நரேன் படமும், 'துப்பறிவாளன் 2'வும் உள்ளன. இன்னும் சில சுவாரசியமான கதைகளைக் கேட்டிருக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார் பிரசன்னா.
மேலும், 'கண்ட நாள் முதல் 2’ வருமா? சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் திட்டம்?' என்ற கேள்விக்கு "கண்டிப்பாக இருக்கிறது. ஏற்கெனவே அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டேன். எனக்கு வாழ்த்து சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார் பிரசன்னா.
அதனைத் தொடர்ந்து "’5 ஸ்டார்' படத்தில் என்னை முதல் முறை பெரிய திரையில் பார்த்த தருணம்தான் பெருமையான தருணம். ஆனால் இருப்பதிலேயே அதிக பெருமைமிகு தருணம் இனிமேல்தான் வரும் என நம்புகிறேன்" என்றும் ஒரு கேள்விக்குப் பதிலளித்தார் பிரசன்னா.