கரோனா விழிப்புணர்வுக்காக பாடலொன்றை எழுதியுள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. விரைவில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது.
கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுக்கவே பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர். இந்த கரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும், பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, கரோனா வைரஸ் தொடர்பாக பாட்டுகளையும் சிலர் வெளியிட்டு வருகிறார்கள். இந்தப் பட்டியலில் தற்போது இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார். இதற்கு ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. அந்தப் பாடலின் வரிகள் இதோ:
பல்லவி
உன்னைக் காக்கும்
நேரமிது
உன் உயிரை காக்கும்
நேரமிது
உன் உறவை காக்கும்
நேரமிது
உன் நாட்டை காக்கும்
நேரமிது
தனித்திருப்பவன் மனிதன்
பிறரை காக்க நினைக்கிற
புனிதன்
கோரஸ்:
வெளியே போகாதே
உயிரை போக்காதே
தனியே இருப்பாயே
தலைமுறை காப்பாயே
சரணம்;
முத்தம் வேண்டாம்
பறக்கும் முத்தமிடுவோம்
கை குலுக்க வேண்டாம்
கையசைத்தால் போதும்
கட்டியணைக்க
வேண்டாம்
யாரையும் தொட்டு
பேச வேண்டாம்
உரையாடல் பருக
இரண்டு மீட்டர்
இடைவெளி தருக
சோப்பு நீரீலே
கை கழுவினால்
கொரானாவுக்கு
சமாதி கட்டலாம்
உயிர் கொல்லிக்கு
கொள்ளி வைக்கலாம்
உலகையே காக்கலாம்
மீண்டும் பல்லவி