இணையத்தில் ஒவ்வொரு வாரமும் இலவச நடனப் பயிற்சி வகுப்புகளை எடுக்க நடிகை மாதுரி தீக்ஷித் முடிவு செய்துள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி வீட்டில் இருப்பவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் பொருட்டு, dancewithmadhuri.com என்ற இணையதளத்தை மாதுரி தீக்ஷித் ஆரம்பித்துள்ளார். இதில் ஒவ்வொரு வாரமும் இரண்டு இலவச நடனப் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்.
ஏப்ரல் மாதம் முழுக்க இது தொடரும். கரோனா அச்சத்தில் இருப்பவர்களை உற்சாகப்படுத்தி மாதுரி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதைத் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ள மாதுரி, நாம் கடினமான காலகட்டத்தில் இருப்பதால் இந்த ஊரடங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், டான்ஸ் வித் மாதுரி குழுவினர் மக்களிடையே நடனம் மூலம் உற்சாகத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
#LearnAMove #ShareAMove என்ற ஹேஷ்டேகில் இந்த முயற்சி இன்று, (ஏப்ரல் 1-ம் தேதி) தொடங்கி, ஏப்ரல் 30-ம் தேதி வரை தொடரும். மேலும், அனைவரையும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி மாதுரி தீக்ஷித் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.