கஜோலுக்கும், மகளுக்கும் கரோனா தொற்றா? - அஜய் தேவ்கன் விளக்கம்

நடிகர் அஜய் தேவ்கன் தன் மனைவி கஜோலுக்கும், மகள் நைஸாவுக்கும் எந்த உடல் உபாதையும் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அனைவரையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இதனிடையே, அஜய் தேவ்கன் - கஜோல் தம்பதியினரின் மகள் நைஸா சிங்கப்பூரில் படித்து வருகிறார். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நைஸா இந்தியா திரும்பியுள்ளார். நைஸாவை விமான நிலையத்திலிருந்து கஜோல் அழைத்து வரும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

தொடர்ந்து நைஸாவுக்கும், கஜோலுக்கும் கரோனா தொற்று இருப்பதாக யாரோ கிளப்பிவிட அதற்கு தற்போது அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

"விசாரித்த அனைவருக்கும் நன்றி. கஜோல், நைஸா இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்கள் உடல்நலம் பற்றிய புரளியில் எந்த உண்மையும், அடிப்படையும் இல்லை" என்று அஜய் தேவ்கன் தெரிவித்துள்ளார்.

தற்போது அஜய் தேவ்கனின் குடும்பத்தினர் அனைவரும் மும்பையில் அவர்கள் வீட்டில் சுய தனிமையில் இருக்கின்றனர்.

சமீபத்தில் கஜோல், வீட்டுத் தனிமையில் 9-வது நாள் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE