இந்த வருடம் நிச்சயமாகத் தமிழ்ப் படத்தில் நடிப்பேன் என்று நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அருவா' படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் பணிகள் இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சத்தால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாயகியாக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இதில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். அவரோ படப்பிடிப்புத் தேதிகளை முடிவு செய்துவிட்டுச் சொல்லுங்கள், என் தேதிகள் இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று உறுதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே, மீண்டும் தமிழில் பூஜா ஹெக்டே என்று செய்திகள் வெளியாகின. இதனை வைத்து பலரும் ட்விட்டர் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
» பொருளாதாரச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறோம்: கரோனா பாதித்த நடிகர் வெளியிட்ட வீடியோ
» வைரலான அல்லு அர்ஜுன் படத்தின் போஸ்டர்: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
இந்தத் தகவல் தொடர்பாக பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"ஹலோ ஹலோ. தமிழ்ப் படங்களில் நான் நடிப்பது குறித்த எந்த முடிவுக்கும் யாரும் வரவேண்டாம். இப்போதைக்கு எதிலும் நான் கையெழுத்திடவில்லை. என்னிடம் இரண்டு கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால் எல்லாம் சரியாக நடந்தால் இந்த வருடம் நிச்சயமாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காகக் காத்திருக்கிறேன். நன்றி".
இவ்வாறு பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.