கரோனா வைரஸ் தடுப்பு: திருநங்கைகளுக்கு லாரன்ஸ் உதவி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கி லாரன்ஸ் உதவி செய்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 74 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் அளித்துள்ள பேட்டியில், டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 50 பேருக்கு கரோனா இருப்பதை உறுதி செய்துள்ளார். இதனால் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் உதவி புரிந்து வருகிறார்கள்.

இவ்வாறு திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி செய்துள்ளார் லாரன்ஸ். சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் சுமார் 400 பேருக்கு 10 நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், உடைகள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE