நலிந்த கலைஞர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவிகள் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நாசர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவ பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் உதவிகள் செய்து வருகிறது.
இதனிடையே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நாசர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்ச கடம்பூர் ராஜூவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
» என்னுடைய வாழ்க்கையின் நீதிபதியாக இருப்பதை நிறுத்துங்கள்: மகேஸ்வரி சாடல்
» பெண்கள் மேடையேறி வெளிச்சம் பெறத் தொடங்கியுள்ளனர்: மனிஷா கொய்ராலா
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்களும் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நாடகக் கலைஞர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் மாதம் முதல் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், திரைப்படப் படப்பிடிப்புகளும் மாவட்டங்களில் நடைபெற இருந்த நாடக விழாக்களும் நடைபெறாமல் போனதால் அதையே நம்பி இருக்கும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்படம் / நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தாங்கள் இதனைக் கருத்தில்கொண்டு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்யப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இக்காலகட்டத்தில் தாங்கள் செய்யும் பேருதவி எங்களின் மனதில் நீங்காத இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு நடிகர் நாசர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.