அமைதியாக உதவி செய்பவர்களைப் பற்றிய ஊகம் முட்டாள்தனமானது: இயக்குநர் தேவா கட்டா

By செய்திப்பிரிவு

அமைதியாக உதவி செய்பவர்களைப் பற்றி ஊகம் செய்வது முட்டாள்தனமானது என்று இயக்குநர் தேவா கட்டா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் குறும்படம் மற்றும் ஆவணப் பட இயக்குநராக அறியப்பட்டவர் இயக்குநர் தேவா கட்டா. 2010-ம் ஆண்டு இவர் இயக்கிய 'ப்ரஸ்தனம்' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படம் கடந்த ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்புக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அதே போல், சிலர் வெளியே பிரபலப்படுத்தாமல் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த இரண்டையும் ஒப்பிட்டு தனது ட்விட்டர் பதிவில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் தேவா கட்டா.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"சினிமா துறையில் இருந்துகொண்டு கோவிட்-19 மற்றும் பல பிரச்சினைகளுக்காக உதவிய சில நல்ல உள்ளங்களை எனக்குத் தெரியும். ஆனால், அவை வெளியே தெரிய அவர்கள் விரும்புவதில்லை. அதை அவர் தனிப்பட்ட/ ஆன்மிக செயலாகப் பார்க்கின்றனர். வெளியே சொல்பவர்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது மற்றவர்களை ஊக்கப்படுத்தி, ஒரு நல்ல சங்கிலித் தொடரை உருவாக்குகிறது. அமைதியாக உதவி செய்பவர்களைப் பற்றி ஊகம் செய்வது முட்டாள்தனமானது. அவர்களுடைய பார்வையிலிருந்து புரிந்துகொள்வது நம் பொறுப்பு. தர்மம் என்பது சமூக அழுத்தங்களால் செய்யப்படும் ரவுடி மாமூல் அல்ல".

இவ்வாறு தேவா கட்டா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE