கரோனா வைரஸ் பாதிப்புக்காக, தமிழக அரசுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழ்த் திரையுலகில் முதல் நடிகராக இந்தத் தொகையை அறிவித்திருப்பதற்கு சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.