கரோனா தொற்று பரவி வருவதன் காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால் தனது திருமணத்தை தெலுங்கு நடிகர் நிதின் ஒத்திவைத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தனது நிச்சயதார்த்தம் குறித்துப் பகிர்ந்திருந்த தெலுங்கு நடிகர் நிதின், ஷாலினி என்பவரை ஏப்ரல் 16-ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. துபாயில் திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாகத் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால், கரோனாவால் நிலவி வரும் பதற்றம், ஊரடங்கு ஆகியவை மண வீட்டாரைச் சிந்திக்க வைத்துள்ளன. திங்கட்கிழமை தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதின், திருமணம் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத் தேதி உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல் பகிர்ந்தார்.
தனது ரசிகர்கள் அனைவரும் இந்த நேரத்தில் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் என்று எதிலும் ஈடுபட வேண்டாம் என்றும், அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
» கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் கிராமப்புற மக்களுக்குத் தெரியவில்லை: சூரி உருக்கம்
» கரோனா பாதிப்பால் கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர் உயிரிழப்பு
அதேவேளையில், கீர்த்தி சுரேஷுடன் நிதின் அடுத்து நடிக்கும் ’ரங்க் தே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்துக்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.