மீண்டும் 'பிக் பாஸ்' ஒளிபரப்பைத் தொடங்கிய விஜய் டிவி

By செய்திப்பிரிவு

மீண்டும் 'பிக் பாஸ்' ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது விஜய் டிவி நிறுவனம்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியா முழுக்கவே கல்வி நிலையங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சினிமா மற்றும் தொலைக்காட்சி சீரியல்கள் என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.

திரையுலகினர் பாதிக்கப்பட்டு இருப்பது மட்டுமன்றி, தொலைக்காட்சி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எப்படி என்றால், சீரியல்கள் படப்பிடிப்பு இல்லாமல் புதிதாக எதை ஒளிபரப்புவது என்ற குழப்பத்தில் மூழ்கிப் போயுள்ளனர். இதனால், தங்களுடைய தொலைக்காட்சியில் முன்னதாக ஹிட்டடித்த நிகழ்ச்சிகள், சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. இதன் கடைசி சீசனின் ஒரு பகுதியை மட்டும் இன்று (மார்ச் 30) மாலை 6:30 மணியளவில் ஒளிபரப்பியுள்ளது விஜய் டிவி. இதற்கான ப்ரோமோவை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், அதே போல் பிரபலமான 'சின்ன தம்பி' என்ற சீரியலையும் மறு ஒளிபரப்பைத் தொடங்கியுள்ளது. மதியம் 3 மணியளவில் தினமும் ஒளிபரப்பட்டும் என்று அந்த சீரியலில் நடித்த ப்ரஜன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE