சூர்யாவுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?

By செய்திப்பிரிவு

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள 'அருவா' படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சத்தால் இப்போது படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாயகியாக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. ஆனால், தேதிகள் ஒத்துவராத காரணத்தால் தற்போது பூஜா ஹெக்டேவிடம் பேசியுள்ளனர்.

அவரோ படப்பிடிப்புத் தேதிகளை முடிவு செய்துவிட்டுச் சொல்லுங்கள். என் தேதிகள் இருந்தால் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். படப்பிடிப்பு எப்போது என்பது முடிவாவதைப் பொறுத்து பூஜா ஹெக்டே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது முடிவாகும்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இந்தப் படம் தலைப்பு பிரச்சினையிலும் சிக்கியுள்ளது. தலைப்பை மாற்றவுள்ளார்களா அல்லது 'அருவா' தலைப்பிலேயே தொடங்குகிறார்களா என்பது விரைவில் முடிவாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE