ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்துள்ள 25,000 சினிமா தொழிலாளர்களுக்கு உதவுவதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் உறுதியளித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
நாளுக்கு நாள் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பாலிவுட் நடிகர் சல்மான் கான் 25,000 சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
இதுகுறித்து இந்திய சினிமா ஊழியர்கள் சம்மேளனத்தின் (FWICE) தலைவர் பி.என்.திவாரி கூறியிருப்பதாவது:
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை மூலம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு அவர்கள் எங்களை அழைத்து இதை உறுதி செய்தார்கள். எங்கள் அமைப்பில் மொத்தம் 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 25,000 பேர் தற்போது பொருளாதார தேவையில் உள்ளனர். அவர்களுக்கான உதவிகளை செய்து தருவதாக பீயிங் ஹ்யூமன் அறக்கட்டளை உறுதியளித்துள்ளது.
மீதமுள்ள 4,75,000 தொழிலாளர்களால் இன்னும் 1 மாதத்துக்கு தாக்குப்பிடிக்க முடியும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் எங்களிடம் உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்களால் அவற்றை இங்கு வந்து பெற்றுச் செல்ல முடியவில்லை. அந்த பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
தொழிலாளர்களுக்கு உதவுமாறு பாலிவுட்டில் உள்ள இன்னும் பலருக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் எங்களுக்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இவ்வாறு பி.என்.திவாரி கூறினார்.