அமெரிக்காவிலிருந்து திரும்பியதால் தனிமைப்படுத்திக் கொண்ட மம்தா மோகன்தாஸ்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவிலிருந்து திரும்பியதால், கரோனா முன்னெச்சரிக்கையாகத் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் மம்தா மோகன்தாஸ்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

இதனிடையே பொதுமக்களையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு திரையுலகப் பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், சில திரையுலகப் பிரபலங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பியதால் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்கள். அவ்வாறு நடிகை மம்தா மோகன்தாஸ் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"என்னையும், என்னைச் சேர்ந்தவர்களையும் பலர் அழைத்து நாங்கள் நலமாக இருக்கிறோமா என்று கேட்கிறார்கள். ஏனென்றால் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பது ஒருவர் உடல்நலம் குன்றினால் மட்டுமே செய்யும் விஷயம் என்று பலர் நினைக்கின்றனர்.

நான் சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து இந்தியாவுக்கு வந்ததால் நானே தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன். அதுதான் விதிமுறை, உங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ளுங்கள். ஆம், உலகமே இப்போது ஸ்தம்பித்துள்ளது. எனது படப்பிடிப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு அடுத்தது என்ன என்று யாருக்கும் தெரியாது.

இவ்வளவு நேரத்தை வைத்துக்கொண்டு இப்போது நாம் என்ன செய்வது?

* இதையே நினைத்து மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். பீதியை, பயத்தைப் பரப்பாதீர்கள்

* நீங்கள் இந்த நிலை குறித்துச் செய்ய முடிவது வீட்டிலேயே இருப்பது, கைகளைக் கழுவுவது (20 நொடிகள்), சுத்தப்படுத்துவது மட்டுமே. வேறொன்றுமல்ல

* இந்த நேரத்தைக் குடும்பத்துடன் பிணைப்பை வலுவாக்கச் செலவிடுங்கள்.

* நீங்கள் தனியாக இருந்தால் உங்களைப் பார்த்துக் கொள்வதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மனரீதியாக, ஆன்மிக ரீதியாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் பிஸியாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அப்படியென்றால் உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. அதனால் உங்கள் அறிவை இழந்து அந்த நேரத்தை வெளியே சென்று கழிக்கலாம் என்று வெளியே சென்று பொறுப்பற்று கோவிட் தொற்றுடையவராக மாறாதீர்கள். காலியாக இருக்கும் மனதில் மோசமான சிந்தனைகள் எளிதில் உதிக்கும்.

வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், உங்கள் இடத்திலேயே நேரத்தைக் கழிக்க அழகான வழிகளைக் கண்டறியுங்கள். இது மற்றவர்களைப் பாதுகாப்பாக வைக்கவும் உதவும். நீங்கள் என்ன செய்ய விரும்பினாலும் வீட்டிலிருந்தே செய்யுங்கள். உங்கள் ஒட்டுமொத்த நாளையும் மொபைல், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று செலவிடாதீர்கள். நேரத்தை ஒழுங்காகத் திட்டமிடுங்கள். வாழ்த்துகள். இந்தக் கட்டத்தைத் தாண்டி நாம் பத்திரமாக மீண்டு வருவோம் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE