'வேட்டையாடு விளையாடு 2' உறுதி செய்த கௌதம் மேனன்

By செய்திப்பிரிவு

'வேட்டையாடு விளையாடு 2' படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதை இயக்குநர் கௌதம் மேனன் உறுதி செய்தார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில், 2006-ம் ஆண்டு வெளியான படம் 'வேட்டையாடு விளையாடு'. மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தின் 2-ம் பாகம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், யாருமே அதிகாரபூர்வமாக தெரிவிக்காமல் இருந்தார்கள். கமல், வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ், கௌதம் மேனன் மூவரும் இருக்கும் புகைப்படம் வெளியானதால், இந்தக் கூட்டணிதான் 'வேட்டையாடு விளையாடு 2' பண்ணவுள்ளதாகக் குறிப்பிட்டார்கள்.

இதனிடையே, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு தான் நடிகராக வலம் வருவது குறித்துப் பேட்டியளித்துள்ளார் கௌதம் மேனன். அதில் "கௌதம் என்ற நடிகரைப் பற்றிய பேட்டிதான். ஆனால் வேட்டையாடு விளையாடு 2 பற்றிக் கேட்காமல் இருக்க முடியவில்லை" என்ற கேள்விக்கு, கௌதம் மேனன் பதில் அளித்தார். அதில், "இப்போதைக்கு அமைதியாக இருக்கிறோம். நான் மீண்டும் ஒரு முறை கமலிடம் கதையைச் சொல்ல வேண்டும். ஏப்ரலில் எல்லாம் சரியாக நடக்கும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 'வேட்டையாடு விளையாடு 2' பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகியுள்ளது.

அதே பேட்டியில், " 'வேட்டையாடு விளையாடு' படத்தில் கமலின் அறிமுகக் காட்சி அதிகம் பார்க்கப்பட்ட அறிமுகக் காட்சிகளில் ஒன்று. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் உங்கள் அறிமுகக் காட்சியும் அப்படி வைரலாகி வருகிறதே” என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு கௌம் மேனன், "நான் கமலின் மிகப்பெரிய ரசிகன். ரசிகர்கள் அவரைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, மீதிக் கதை அப்படி இருக்காது என்றாலும் அந்தக் காட்சியை மட்டும் அப்படி எழுதினேன்.

தற்காலிகமாக இயக்குநர் என்ற இடத்திலிருந்து வெளியே வந்தேன். அது ஒரு ரசிகனின் காணிக்கை. 'வேட்டையாடு விளையாடு 2'-விலும் அப்படி ஒரு அறிமுகக் காட்சி இருக்கிறது. அதைப் படம்பிடிக்க ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE