'இன்று நேற்று நாளை 2'  பணிகள் தாமதம் ஏன்? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

By செய்திப்பிரிவு

'இன்று நேற்று நாளை 2' படத்தின் பணிகளில் தாமதம் ஏன் என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் 'இன்று நேற்று நாளை'. பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். சி.வி.குமார் மற்றும் ஞானவேல் ராஜா இணைந்து தயாரித்த இந்தப் படத்துக்கு, ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்தார்.

2019-ம் ஆண்டு இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளதாகவும், ஆர்.ரவிக்குமார் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை,வசனம் எழுத, அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.கார்த்திக் இயக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரம் இதிலும் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, 'இன்று நேற்று நாளை 2' தொடர்பாக எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை. பலருமே இந்தப் படம் வெறும் அறிவிப்புடன் நிற்பதாக எண்ணினார்கள். இந்தப் படம் தொடர்பாக சி.வி.குமாரின் தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார்கள்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக திருக்குமரன் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம், "ஸ்கரிப்ட் இப்போது முடியும் தருவாயில் உள்ளது. இயக்குநர் ரவிக்குமார் நேற்று காலையில் தான் முதல் பிரதியை எங்களுக்கு அனுப்பினார். கதையிலிருந்த சிக்கல் மற்றும் அயலான் படத்தை இயக்கிக் கொண்டிருந்தது உள்ளிட்ட காரணங்களால் கதை வேலைகள் தாமதமானது. கதை சிறப்பாகவும் நகைச்சுவையாகவும் வந்திருக்கிறது. ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்." என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தப் படத்தின் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்பது உறுதியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE