இப்போது வீட்டிலேயே தங்குபவர்கள்தான் சூப்பர் ஸ்டார்: அக்‌ஷய் குமார்

நடிகர் அக்‌ஷய் குமார், இப்போது வீட்டில் இருப்பவர்கள்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்‌ஷய் குமார். ஜோகிந்தர் துதேஜா என்ற பத்திரிகையாளர் ஒரு வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில், 'ராம்போ', 'ஹீரோபந்தி 2', 'பாகி 4' உள்ளிட்ட படங்களின் வரிசை கையிலிருக்கும் டைகர் ஷெராஃப்தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆகப்போகிறார் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் சொல்லியிருக்கும் அக்‌ஷய் குமார், "கண்டிப்பாக நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் ஜோகிந்தர். டைகர் ஷெராஃப் அற்புதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் வீட்டில் இருந்துகொண்டு, தனது பாதுகாப்பையும் தனது குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே ஒரே சூப்பர் ஸ்டார். நீங்கள் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் 21 நாள் தேசிய ஊரடங்குக்கு ஆரம்பத்திலிருந்தே ஆதரவளித்து வரும் அக்‌ஷய் குமார், சமீபத்தில் ஊரடங்கின்போது வெளியே வந்த மக்கள் குறித்து வருத்தத்துடன் கருத்துப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE