கரோனா நிவாரணத் தொகைக்குத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் 4 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 745 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை பவன் கல்யாண் 1 கோடி ரூபாய், மகேஷ் பாபு 1 கோடி ரூபாய், ஜூனியர் என்.டி.ஆர் 75 லட்ச ரூபாய், ராம் சரண் 70 லட்ச ரூபாய், நிதின் 20 லட்ச ரூபாய், வருண் தேஜ் 10 லட்ச ரூபாய் எனத் தொடங்கி பலரும் நிதியுதவி அளித்துள்ளனர்.
இதனிடையே, முதலில் நடிகர் பிரபாஸ் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்று தகவல் வெளியானது. தற்போது அவர் 4 கோடி ரூபாய் வழங்கியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. பிரமதரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய், ஆந்திரா மற்றும் தெலங்கானா நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் என மொத்தம் 4 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது உறுதியாகி இருக்கிறது.
இந்தியத் திரையுலகப் பிரபலங்களில் அதிகமான தொகையை நிவாரண நிதிக்கு அளித்துள்ள முதல் நடிகர் பிரபாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அவருடைய ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.