அவருக்கா அனுப்பியிருக்கிறீர்கள், இன்று அது எனக்குக் கிடைக்குமா என ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் ராஜமௌலியைக் கிண்டல் செய்திருக்கிறார்கள்.
'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' என்ற படம் உருவாகி வருகிறது. இதுவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்று (மார்ச் 27) ராம் சரணின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு படக்குழுவினர் சார்பில் வீடியோ ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு அறிவித்தார்கள். காலை 10 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை.
இது தொடர்பாக ராம் சரணுடன் நடித்துள்ள ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பதிவில், "மன்னித்து விடுங்கள் சகோதரா.. உங்களுக்கான அன்பளிப்பை நேற்று இரவு ஜக்கண்ணாவுக்கு (ராஜமௌலி) அவருடைய கருத்துக்காக அனுப்பினேன். இது எப்படிப் போகும் என்று உங்களுக்குத் தெரியும். சிறிய தாமதம் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்'' என்று பதிவிட்டார்.
» ரசிகர்களின் தொடர் விமர்சனம்: இன்ஸ்டாகிராம் பதிவை நீக்கிய கனிகா கபூர்
» கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ராம்சரண் தனது ட்விட்டர் பதிவில், "என்ன? அவருக்கு அனுப்பியிருக்கிறீர்களா? இன்று அது எனக்குக் கிடைக்குமா?" என்று தெரிவித்துள்ளார்.
இருவரின் ட்வீட்களுமே தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டு வெளியாவதாக இருந்த 'இரத்தம் ரணம் ரெளத்திரம்', படப்பிடிப்புத் தாமதம் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்து வருகிறது.