கரோனா தொற்று அச்சம் காரணமாக தங்கள் மகன்களைப் பார்த்துக் கொள்வதற்காக விவாகரத்தான ஹ்ரித்திக் ரோஷனும் அவர் மனைவியும் தற்காலிகமாக ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.
2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹ்ரித்திக் ரோஷனும் - சுஸான் கானும் 2013-ம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து 2014-ம் அண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு ஹ்ரீஹான், ஹ்ரிதான் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தற்போது தேசிய ஊரடங்கு அடுத்த 3 வாரங்களுக்கு அமலில் இருப்பதால், தங்கள் மகன்களை இணைந்து பார்த்துக் கொள்ள, சுஸான் தனது வீட்டிலிருந்து ஹ்ரித்திக்கின் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியுள்ளார். இதுகுறித்து ஹ்ரித்திக் ரோஷன் உருக்கமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் தனது மனைவி சுஸானுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹ்ரித்திக், "நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது எனது குழந்தைகளிடமிருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று ஒரு அப்பாவாக என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
நிச்சயமற்ற சூழலில், பல மாதங்கள் சமூகத்திடமிருந்து விலகியிருக்க வேண்டும். ஊரடங்கு தொடரும் என்ற சாத்தியங்கள் இருக்கும் வேளையில் உலகம் ஒன்றாக ஒற்றுமையுடன் சேர்ந்து வருவது மனதுக்கு இதமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் பதிவுடன் அவரது மனைவி சுஸான், கட்டிலில் உட்கார்ந்து காஃபி குடிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
"இது எனது அன்பான சுஸான் (என் முன்னாள் மனைவி) புகைப்படம். எங்கள் குழந்தைகள் எங்கள் இருவரிடமிருந்தும் காலவரையின்றி பிரிந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, தானே முன் வந்து, தனது வீட்டிலிருந்து தற்காலிகமாக இங்கு வந்திருக்கிறார். இந்த ஆதரவுக்கும், புரிதலுக்கும் நன்றி சுஸான்" என்றும் ஹ்ரித்திக் குறிப்பிட்டுள்ளார்.