கரோனா முன்னெச்சரிக்கை: பெப்சி தொழிலாளர்களுக்கு கமல், ஷங்கர், தனுஷ் நிதியுதவி

கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்களுக்கு கமல், ஷங்கர், தனுஷ் உள்ளிட்ட பலர் இன்று நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

முன்னதாக படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பலர் நிதியுதவியாகவும், அரிசி மூட்டையாகவும் உதவியிருக்கிறார்கள். (மார்ச் 24-ம் தேதி வரை உதவியவர்களின் முழுமையான பட்டியலைக் காண). இன்று (மார்ச் 25) கமல் 10 லட்ச ரூபாய், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாய், தனுஷ் 15 லட்ச ரூபாய், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 1 லட்ச ரூபாய் மற்றும் நடிகர், இயக்குநர் சித்ரா லட்சுமணன் 25 ஆயிரம் ரூபாய் என பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE