தமிழ்நாடு போலீஸுக்கு சல்யூட்: மாதவன் 

By செய்திப்பிரிவு

போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீத்தின் செயலை மிகவும் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை மாதவன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், வெளியே வரும் பொதுமக்களைக் காவல்துறையினர் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வருகிறார்கள்.

அதையும் மீறி சென்னையில் பலர் பைக்கில் வெளியே சென்றார்கள். அவ்வாறு எச்சரிக்கையை மீறி வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளைக் கையெடுத்துக் கும்பிட்டு ரஷீத் என்கிற போக்குவரத்து உதவி ஆய்வாளர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார் . அவரது வேண்டுகோளால் கலங்கிய வாகன ஓட்டிகளில் ஒருவர், அவரது காலில் விழுந்தார். நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே நடந்தது.

இந்த வீடியோ பதிவு இன்று (மார்ச் 25) காலை முதலே ட்விட்டர் தளத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பதிவுக்கு நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவில், "நமது முட்டாள் சகோதரர்கள் சிலரிடம் தமிழ்நாடு போலீஸ் வலியுறுத்தவும் கெஞ்சவும் செய்கிறார்கள். எனக்கு இந்தக் காவலர்கள் மேல் அன்பும், மரியாதையும், நன்றியுணர்வும் கூடுகிறது. தமிழ்நாடு போலீஸுக்கு சல்யூட். உங்களுக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். நான் மிகவும் உணர்ச்சிகரமாக உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE