இது நேரமல்ல: கமல் ட்வீட்டுக்கு இயக்குநர் கெளரவ் பதில்

By செய்திப்பிரிவு

இது நேரமல்ல என்று பிரதமர் மோடியின் பேச்சு குறித்த கமல் ட்வீட்டுக்கு இயக்குநர் கெளரவ் பதிலளித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

பிரதமர் மோடியியின் பேச்சு குறித்து கமல் தனது ட்விட்டர் பதிவில், "உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்கச் சொல்லும் நேரத்தில், அணி சேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்" என்று பதிவிட்டார் கமல்.

இந்தப் பதிவுக்கு ட்விட்டர் தளத்தில் எதிர்ப்பு வலுத்தது. கமல் ட்வீட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக 'தூங்காநகரம்', 'சிகரம் தொடு' மற்றும் 'இப்படை வெல்லும்' படங்களின் இயக்குநர் கெளரவ் தனது ட்விட்டர் பதிவில், "அன்புள்ள கமல் சார். அரசியல் பேசவும், அரசையும், அதிகாரிகளையும் எச்சரிக்கவும் இது நேரமல்ல. ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் ஒட்டுமொத்த ஆழ்வார்பேட்டை மக்களின் தேவையை நீங்கள் நிறைவேற்றலாம். உங்களின் ரசிகனாக நான் தூங்கா நகரத்தில் அதைத்தான் செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் கெளரவ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE