ஊரடங்கு குறித்த பதிவு: ரசிகரின் அநாகரிகமான கருத்துக்குப் பதிலடி கொடுத்த மஞ்சிமா மோகன்

By செய்திப்பிரிவு

ஊரடங்கு உத்தரவு குறித்த தனது பதிவில் அநாகரிகமான முறையில் கருத்து தெரிவித்த ரசிகர் ஒருவருக்கு நடிகை மஞ்சிமா மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐத் தாண்டிவிட்டது. இதுவரை 10 பேர் இந்த வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கியூபா உட்பட பல நாடுகள், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், வரும் நாட்களில் கரோனா வைரஸ் இன்னும் வேகமாகப் பரவும் என்ற அச்சம் நிலவுகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''மக்களுக்கு வீட்டில் இருப்பது ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்'' என்று பதிவிட்டிருந்தார்.

மஞ்சிமாவின் இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் ரசிகர் ஒருவர், ''மஞ்சிமாவின் உருவம் குறித்து அநாகரிகமான முறையில் பின்னூட்டமிட்டு நீயா எங்களுக்கு உணவளிப்பாய்?'' என்று கேட்டிருந்தார்.

அந்த ரசிகருக்கு தனது மற்றொரு பதிவில் மஞ்சிமா பதிலடி கொடுத்திருந்தார். அந்தப் பதிவில், ''நம்மிடையே இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற ட்வீட்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. ஆனால், மக்களை வீட்டில் இருக்கச் சொன்னதற்கு எனக்குக் கிடைத்தது இதுதான். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது யாருக்கும் மிகவும் எளிதான ஒன்று நீங்கள் கருதுவீர்களானால், நீங்கள் நினைப்பது தவறு ப்ரோ. பணம் நமக்கு வானத்திலிருந்து கொட்டுவதில்லை'' என்று மஞ்சிமா மோகன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE