பெப்சி தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் 10 லட்ச ரூபாய் நிதியுதவி

By செய்திப்பிரிவு

கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும், கல்விக் கூடங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.

மேலும் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெப்சி தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தும், அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் நடிகர் - நடிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

இதில் நடிகர்களின் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பார்த்திபன் 250 மூடை அரசி வழங்கியுள்ளார். ஒவ்வொன்றுமே 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா 10 மூடை அரிசி வழங்கியுள்ளார். அனைத்துமே 25 கிலோ எடை கொண்டதாகும்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பெப்சி அமைப்பு 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். தற்போது ஒவ்வொருவராக பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE