வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் நிம்மதியாகத் தான் இருக்கிறேன்: விஜய்

வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் நிம்மதியாகத் தான் இருக்கிறேன் என்று 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்று (பிப்ரவரி 15) இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்குப் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

’மாஸ்டர்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி முடிந்தவுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா மற்றும் ஆர்.ஜே.விஜய் இருவரும் விஜய்யிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள்.

அப்போது, "இப்போது இருக்கும் தளபதி 20 வருடங்களுக்கு முன்பு இருந்த இளைய தளபதியிடம் சொல்ல விரும்புவது என்ன?” என்று விஜய்யிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜய் நீண்ட யோசனைக்குப் பிறகே பதிலளித்தார்.

அந்தக் கேள்விக்கு, "இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையைப் பற்றிக் கேட்பேன். அப்போது வருமான வரித்துறை சோதனை எல்லாம் இல்லாமல் ரொம்ப நிம்மதியாக இருந்தேன். இப்போது வருமான வரித்துறை சோதனை நடந்தாலும் நிம்மதியாகத் தான் இருக்கிறேன்” என்று பதிலளித்தார் விஜய்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE